செப்டம்பர் 8-சென்னையில் ஆழ்வார் திருநகர் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிகுலேசன் பள்ளியிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தினர்.
பின்னர் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது, இந்த வெடிகுண்டு புரளியை கிளப்பியது செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வினாயகர் சதுர்த்தி விடுமுறையில் அதிக அளவிலான வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டு, அதை சரியாக செய்து முடிக்காததாலும், அன்று நடைபெறவிருந்த மாததேர்வுக்கு படிக்காததாலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அம்மாணவன் தெரிவித்துள்ளான்.
போலீசார் அவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர், அவனது பெற்றோர்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். விடுமுறை நாட்களிலும் அதிக அளவு வீட்டு பாடங்களை தந்து அழுத்தத்தை உருவாக்குவது குறித்தும் மாணவர்களுக்கு அளவுக்கு மீறி தரப்படும் பிரஷர் குறித்தும் எந்த விவாதங்களும் நடைபெறாமல் இருப்பது வருந்தத்தக்கது.