BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

அண்மை செய்திகள்

முக்கிய செய்திகள்

சினிமா

உடல்நலம்

Wednesday, 15 January 2025

`விடுதலை படம் டு வாச்சாத்தி கொடூரம்..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து, விடுதலை படம், வாச்சாத்தி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...

``இளைஞர்கள் சி.பி.எம் கட்சியை கவனிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?”

``நிச்சயமாக கவனிக்கிறார்கள். உதாரணத்திற்கு விடுதலை படம் வந்தது, விடுதலை படம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழ்நாட்டில் எப்படி எல்லாம் வளர்ந்தது என்பதனை மையப்படுத்திய ஒரு திரைப்படம். அந்த மாதிரி திரைப்படத்தை எடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். தமிழ்நாடு மாதிரியான ஒரு மாநிலத்தில் எடுப்பதற்கு துணிச்சல் வேண்டும். கேரளாவில் அந்த திரைப்படத்தை எடுப்பது என்பது ஒரு பெரிய செய்தி இல்லை. ஏற்கனவே அது கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கிற மாநிலம். கம்யூனிஸ்ட் ஆளுகின்ற மாநிலம். தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் கம்யூனிஸ்டு இயக்கம் எப்படி எல்லாம் அதனுடைய வரலாறுகளை உள்ளடக்கியதாக ஒரு படத்தை வெளியே கொண்டு வருவது என்பது ஒரு சாதாரண விஷயமே இல்லை. பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். துணிச்சலான முயற்சி தான் இது. அது ஃபெயிலியர் ஆகி இருந்தால் அவர் என்ன ஆகி இருப்பார் என்று தெரியவில்லை உண்மையிலேயே அது வெற்றிகரமாகும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஏராளமான இளைஞர்கள் கவனிக்க கூடிய ஒன்றாகவும், என்கிட்டயே நிறைய பேர் சார் உங்களுடைய வாச்சாத்தி படம் எடுத்திருக்கிறார்கள் என்று எத்தனையோ பேர் போன் செய்து இருக்கிறார்கள். எல்லாமே உங்க கதை தான் சார் என்று இப்படி எல்லாம் நிறைய இளைஞர்கள் வந்து பேசி இருக்கிறார்கள். போன் செய்து இருக்கிறார்கள்.”

விடுதலை

``விடுதலை படம் மார்க்சிசம் பேசியது, ஆனால் கட்சிக்காரர்கள் பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்கவில்லை என்று சொல்கிறார்கள்?”

``இடதுசாரி கருத்தியல் சார்ந்த ஒரு ஈர்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்கு செல்வது யார் அதற்கு பொருத்தமானவர் என்று அவர்கள் தேர்வு செய்வதில் ஒரு சின்ன பிரச்னை இருக்கிற மாதிரி தான் எனக்கு தோன்றுகிறது. எங்களோடு ஒன்றும் அவர்கள் ஆயிரக்கணக்கில் வரவில்லை. இளைஞர்கள் வருகை குறைவாக தான் இருக்கிறது. இளைஞர்கள் வருவது என்பதுதான் கட்சிக்கு எதிர்காலம். இடதுசாரி கருத்தியலுக்கு உயிரோட்டமா இருக்கிறதுக்கு ரொம்ப முக்கியம். அது தான் நாங்க கவனிச்சது.”

``நிறைய மிரட்டல்களை சந்தித்து இருப்பீர்கள் அதையெல்லாம் உறுதியாக எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”

``நிறைய மிரட்டல்களை நான் சந்தித்துள்ளேன். மாணவர் சங்கப் பணியில் இருக்கும் பொழுது நடந்திருக்கிறது. மலைவாழ் மக்கள் சங்க பணியில் இருக்கும் பொழுதும் நிறைய மிரட்டல்கள் நடந்திருக்கின்றன. வாச்சாத்தி சம்பவத்தில் தலையிட்ட பொழுது வனத்துறையில் இருந்து, காவல்துறையிலிருந்து நிறைய மிரட்டல்களை சந்தித்துள்ளேன். வாச்சாத்தி சம்பவத்தில் தலையிட்ட பொழுது, பாதுகாப்பு இல்லாமல் வாச்சாத்தி பகுதிக்கு சென்றதே இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் பயணிக்கும் பொழுது, தோழர்களுடைய பாதுகாப்புடன், ஆயுதங்களுடன் தான் சென்று இருக்கிறேன். எல்லோருமே அரசாங்க ஊழியர்கள் காவல்துறை சார்ந்தவர்கள், வனத்துறை சார்ந்தவர்கள் எனவே பாதுகாப்புடன் தான் நான் பயணம் செய்திருக்கிறேன்.”

வாச்சாத்தி

``வாச்சாத்தி சம்பவம் எப்போது உங்களுக்கு தெரிய வருகிறது, எப்போது நீங்கள் அந்த கிராமத்திற்குள் செல்கிறீர்கள்?”

``அந்த சம்பவம் நடந்தது 1992 ஜூன் மாதம் 20, 21, 22 ஆகிய தேதிகள். நாங்கள் அந்த பகுதியில் சென்றது ஜூலை மாதம் 14ஆம் தேதி. இதற்கிடையில், மலைவாழ் சங்கத்தின் சார்பாக எல்லா மலைகளிலும் அமைப்பை உருவாக்குவதற்காக, ஒரு மாநாட்டை தமிழ்நாடு முழுவதும் நடத்திக் கொண்டிருந்தோம். அந்த மாதிரி ஒரு மாநாடு சித்தேரி மலையில் நடந்த பொழுது, தலைவர்கள் பேசுவதை பார்த்துவிட்டு வாச்சாத்தி பகுதியில் இருந்து தப்பித்து வந்த 2 பேர் தாமாக முன்வந்து வாச்சாத்தி கிராமத்தில் இப்படி நடந்தது, ஊரில் யாரும் இல்லை, பெண் பிள்ளைகள் மற்றும் ஆண்கள் 200 பேர் ஜெயிலில் அடைத்துள்ளனர், ஆடு மாடுகளை கொண்டு போய் சந்தையில் விற்று விட்டார்கள், பெண் பிள்ளைகளை கெடுத்து விட்டார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். எனவே இவர்கள் சொல்வதை வைத்து நம் உடனே தலையிட முடியாது. அதனால் நேரடியாக அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்ற முறையில் ஜூலை மாதம் 14ஆம் தேதி சென்றோம்.

வாச்சாத்தி மக்கள்

நாங்கள் சென்றபோது அந்த கிராமத்தில் யாருமே கிடையாது, பேச்சு இல்லாத கிராமமாக அது இருந்தது. கிராமம் இருந்தது மக்கள் இருந்ததற்கான சுவடுகள் இருந்தது. மக்கள் வாழ்ந்ததற்கான வீடுகள் இருந்தது. ஆனால் மக்கள் யாரும் இல்லை. அப்படி ஒரு பேச்சு இல்லாத கிராமமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் தலையிட்ட பிறகு அது சிபிஐ விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிட்டத்தட்ட 33 வருடங்களாக அந்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள ஜுடிசியல் சிஸ்டத்தில் உள்ள பிரச்சனை, ஏனென்றால் அந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு 19 வருடங்கள் ஆனது. என்னவென்றால் நீதிபதி விடுமுறை எடுக்கிறார், வக்கீல் விடுமுறை எடுக்கிறார், சாட்சி வராமல் இருப்பது இதுபோன்று ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது.

எஸ்சி எஸ்டி அட்ராசிட்டி ஆக்ட் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பதனால் ஸ்பெஷல் கோர்ட் ஃபார்ம் செய்ய வேண்டும். அதற்கே பல வருடங்கள் எடுத்துக் கொண்டது தமிழ்நாடு அரசு. உயர் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடர்ந்த பிறகு தான், சிறப்பு நீதிமன்றம் வாச்சாத்தி வழக்கிற்கு வாங்கினோம். தமிழ்நாட்டில் மொத்தம் 20 சிறப்பு நீதிமன்றங்கள் மட்டும்தான் இருக்கின்றன. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அது சட்டத்தில் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 20 தனி நீதிமன்றங்கள்தான் இருக்கிறது. மீதி மாவட்டங்களில் கிளப் செய்து வைத்திருக்கிறார்கள். நான் முதல்வரை சந்திக்கும் பொழுது இந்த பிரச்சனை குறித்து பேசுவேன். ஏனென்றால் 10 வருடம் 15 வருடம் முன்பு போடப்பட்ட வழக்குகள் எல்லாம் விசாரிக்கப்படாமல் இருக்கிறது, தீர்ப்பு வராமல் இருக்கிறது. வன்கொடுமையினால் பாதிக்கப்படுவதை விட அந்த நீதிக்காக 10 வருடங்கள் 15 வருடங்கள் காத்துக் கொண்டிருப்பது பெரிய கொடுமை. நீதிமன்றத்தில் கேட்டால், பல நூற்றுக்கணக்கான வழக்குகள் இருக்கிறது நாங்கள் என்ன செய்ய முடியும். படிப்படியாக தான் விசாரிக்க முடியும். 10 வருடம் மற்றும் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்குகள் உட்பட ஸ்பெஷல் கோர்ட் இல்லாததனால் தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கின்றன. எனவே மிகவும் முக்கியமான பிரச்சினையாக நான் இதைப் பார்க்கிறேன்.”

``வாச்சாத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது, அது எப்படி தீர்ப்பு வரும் என்று நினைக்கிறீர்கள்?”

``ஏற்கனவே தருமபுரி மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில், நாங்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் எல்லாமே நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கு வந்து, உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தின் உடைய தீர்ப்பினை அப்படியே ஏற்று கூடுதலாக அப்போது இருந்த எஸ்பி மற்றும் கலெக்டர் ஆகிய இரண்டு பேரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அடிஷனலாக தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், குற்றவாளிகள் பட்டியலில் எஸ்பி கலெக்டர் ஆகிய இரண்டு பேருமே கிடையாது. அப்போது எஸ்பியாக ராமானுஜன் ஐபிஎஸ் இருந்தார். பின்னாளில் தமிழ்நாடு காவல்துறையினுடைய தலைவராக இருந்தார். அவர் காலத்தில் பெரிய கொடுமை வாச்சாத்தி பகுதியில் நடந்தது, பின்னாளில் அவர் தமிழ்நாட்டிற்கே காவல்துறை தலைவர். பாருங்கள் கொடுமையை. அப்போது ஐஏஎஸ் கலெக்டராக இருந்தவருக்கு அதன் பிறகு தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவி உயர்வு கிடைத்தது.

ஒருவேளை இந்த மாதிரி செய்தால் தான் பதிவு உயர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்தது ஜெயலலிதா ஆட்சி காலத்தில். இவர்கள் இரண்டு பேரும் ப்ரோமோஷனில் சென்றதும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான். அவர்கள், இந்த மாதிரியான குற்றங்கள் இழைக்கக் கூடியவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல், அவர்களை ஊக்கப்படுத்துவது பதிவு உயர்வு கொடுப்பது என்பது போன்ற மோசமான கலாச்சாரம் கொண்டிருந்தார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, சிறப்பு அதிரடி படையில் இருந்த ஆட்களுக்கு எல்லாம் ப்ரோமோஷன் கொடுத்தார்கள். அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சதாசிவ கமிஷன் உடைய அறிக்கையை படித்து பாருங்கள். எவ்வளவு பெரிய கொடுமை. பனிஷ் செய்ய வேண்டிய ஆட்களுக்கு எல்லாம், பதிவு உயர்வு கொடுத்தார்கள்.”

`உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எப்படி வரும் என நினைக்கிறீர்கள்?

``மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான தீர்ப்பு தான் வந்திருக்கிறது. நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். அதற்கு காரணம், உண்மையைத் தவிர வேறு எதையும் நாங்கள் நீதிமன்றத்திற்கு முன்னாலோ, மக்கள் முன்னாலோ சொல்லவில்லை. அதனால் எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்திலும் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.”

கார்ட்டூன்: நமக்கு நாமே..!

கார்ட்டூன்: நமக்கு நாமே..!

Tuesday, 14 January 2025

தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?

தை மாத ராசிபலன்: ஜனவரி 14 முதல் பிப்ரவரி 12 வரை மேஷம் முதல் துலாம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்..

மேஷ ராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்த னைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

மேஷ ராசி
மேஷ ராசி

அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜன: 14,17,20,28 பிப்: 1,4,7,10

சந்திராஷ்டமம்: ஜன 24 விடியற்காலை முதல் 25,26 மதியம் வரை

அதிர்ஷ்ட எண்கள்: 2,5

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை

பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல் லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். பழுதான மின்சார, மின்னணு சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். தந்தை வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் ஆரோக்கியம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. மாத முற்பகுதியில் தாய்மாமன் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உணவு விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷப ராசி
ரிஷப ராசி

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் பாராட்டப்படும். சக ஊழியர்கள் கேட்கும் சந்தேகங்களைத் தீர்ப்பதுடன், அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சாதகமான நாள்கள்: ஜன: 16,19,24,29 பிப்: 2,5,8,11

சந்திராஷ்டமம்: ஜன 26 மதியம் முதல் 27,28 இரவு வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

மிதுன ராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் மாதம். அரசாங்கக் காரியங்கள் தாமதமாகவே முடியும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். எதிலும் வெற்றியே காண்பீர்கள். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியா கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவருடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மிதுன ராசி
மிதுன ராசி

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங் கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாம தம் ஏற்படக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவ லகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும். எதிர்பார்த்தபடியே சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜன: 14,17,20,,23,25,27 பிப்: 1,4,8,12

சந்திராஷ்டமம்: ஜன 28 இரவு முதல் 29,30,31 விடியற்காலை வரை

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.

கடக ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக் காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனாலும் மூன்றாவது நபர்களின் தலை யீடு காரணமாகக் குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. அவர்களில் சிலர் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும்.

கடக ராசி
கடக ராசி

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரி களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தொழில், வியாபாரம் நன்றாகவே இருக்கும். போட்டிகள் குறையும். சக வியாபாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

சாதகமான நாள்கள்: ஜன: 14,17,19,24,28 பிப்: 3,6,8,11

சந்திராஷ்டமம்: ஜன 31 விடியற்காலை முதல் பிப் 1 காலை முதல் 2 அதிகாலை வரை

அதிர்ஷ்டஎண்கள்: 5,6

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி

பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

சிம்ம ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சகோதரர்களால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சிம்ம ராசி
சிம்ம ராசி

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கண வரின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத் தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜன: 14,18,20,23,26,29 பிப்: 1,6,9,12

சந்திராஷ்டமம்: பிப் 2 அதிகாலை முதல் 3,4 காலை வரை

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப் பெருமான்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் துர்கைக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

கன்னி ராசி அன்பர்களே!

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்ப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அவ்வப்போது தாயாருடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அவருடைய உடல்நலனிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

கன்னி ராசி
கன்னி ராசி

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். சிலருக்கு நீண்டநாளாகத் தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண் களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சாதகமான நாள்கள்: ஜன: 15,18,21,24,27,30 பிப்: 2,7,11

சந்திராஷ்டமம்: பிப் 4 காலை முதல் 5,6 மாலை வரை

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகாவிஷ்ணு

பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

துலாம் ராசி அன்பர்களே!

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக் கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மனஉறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங் களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களில் சிலரால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். மாதப் பிற்பகுதியில் சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

துலாம் ராசி
துலாம் ராசி

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

சாதகமான நாள்கள்: ஜன: 17,20,23,27,31 பிப்: 1,3,9,12

அதிர்ஷ்ட எண்கள்: 3,7

சந்திராஷ்டம நாள்கள்: பிப் 6 மாலை முதல் 7,8 இரவு வரை

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்

பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடவும்.

Monday, 13 January 2025

Pongal FDFS: போக்கிரி, ஆடுகளம், விஸ்வாசம், பேட்ட - 2000 முதல் இன்று வரை 'பொங்கல் வின்னர்' யார்?

தமிழர் திருநாளை சிறப்பிக்க கரும்பும், சர்க்கரைப் பொங்கலும், புத்தாடைகளும் மட்டுமே போதாது. புதிய படங்கள் பார்ப்பதும் நம் மக்களுக்கு கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான்.

விஷேசம்னாலே சினிமாதான்!

தொலைக்காட்சியிலோ அல்லது திரையரங்கிலோ குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஒரு ஸ்டார் படம் அல்லது ஜாலியான ஒரு படம் தேவை. அந்த நேரத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் போட்டியும் அதிகம்.

இந்த ஆண்டு `வணங்கான்', `மத கஜ ராஜா', `கேம் சேஞ்சர்', `மெட்ராஸ்காரன்', `நேசிப்பாயா', `காதலிக்க நேரமில்லை' உட்பட பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இதேப்போல கடந்த ஆண்டுகளில் போட்டி போட்டு ரிலீஸ் ஆன முக்கிய திரைப்படங்கள் என்னென்ன, அவற்றில் வெற்றிபெற்றவை எவை என்பதை பார்க்கலாம்.

2001

`தீனா', `ப்ரண்ட்ஸ்', `வாஞ்சிநாதன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. தீனா மற்றும் ப்ரண்ட்ஸ் இரண்டும் மிகப் பெரிய வெற்றிய பெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படமான தீனா படத்தில் புதியதொரு அஜித்தை அவரின் ரசிகர்கள் கண்டனர். இந்தப் படத்திற்குப் பிறகுதான். தல என அஜித்குமாரை அவரின் ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர். ப்ரண்டஸ் படம் விஜய், சூர்யா இருவரின் நடிப்பில் வெளியாகியிருந்தது. இன்றளவும் இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் போலீஸ் கதாப்பாத்திரமாக நடித்திருந்த வாஞ்சிநாதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

2002

`பம்மல் கே சம்பந்தம்', `ரெட்', `அழகி', `புன்னகை தேசம்' என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின. பம்மல் கே சம்பந்தம், அழகி திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனின் நகைச்சுவை காட்சிகளை நாம் இன்றளவும் ரசித்துவருகிறோன். புன்னகை தேசம் திரைப்படம் இளைஞர்களால் வரவேற்கப்பட்டது. ரெட் திரைப்படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அன்பே சிவம்

2003

விக்ரம் நடிப்பில் தூள், கமல்ஹாசனின் அன்பே சிவம், விஜய்யின் வசீகரா என மூன்று திரைப்படங்கள் வெளியாகின. அன்பே சிவம் இன்று கொண்டாடப்பட்டாலும் அன்று விமர்சன ரீரியிலான வரவேற்பையே அதிகம் பெற்றது. வசீகரா திரைப்படம் இப்போதும் ரீவாட்ச் வேல்யூ கொண்டிருந்தாலும், 2003 பொங்கல் `தூள்' பொங்கலாகவே அமைந்தது.

2004

விருமாண்டி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், எங்கள் அண்ணா, கோவில் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின. அன்றும் இன்றும் விருமாண்டி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெருந்தீனி. எங்கள் அண்ணா திரைப்படம் விஜயகாந்த் ஸ்டைல் 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி'. இளம் ஹீரோக்களாகக் களமிறங்கிய தனுஷ், சிம்பு இருவரின் படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன.

'விருமாண்டி'

2005

திருப்பாச்சி, ஐயா, தேவதையைக் கண்டேன் படங்கள் ரிலீஸ் ஆகின. விஜய்யின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான வெற்றியைப் பெற்றது திருப்பாச்சி திரைப்படம். ஐயா திரைப்படம் விமர்சன ரீதியிலும் கமர்சியலாகவும் வெற்றிபெற்றது.

2006

ஆதி, பரமசிவன், சரவணா என மூன்று படங்களும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி, எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போயின.

2007

போக்கிரி, ஆழ்வார் மற்றும் தாமிரபரணி என மூன்று திரைப்படங்கள் வெளியாகின. போக்கிரி திரைப்படம் வெளியான பொங்கலை விஜய் ரசிகர்களால் மறக்க முடியாது. மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. தாமிரபரணி திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. ஆழ்வார் திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

போக்கிரி

2008

பீமா, காளை, பழனி திரைப்படங்கள் வெளியாகின. இவற்றில் பீமா மட்டுமே கவனிக்கப்பட்டது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

2009

வில்லு, படிக்காதவன் படங்கள் வெளியாகின. இவற்றில் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்காக மாறாக படிக்காதவன் திரைப்படம் வெற்றியடைந்தது, வில்லு சுமாரான வரவேற்பையே பெற்றது.

2010

ஆயிரத்தில் ஒருவன் மற்றும் குட்டி படங்கள் ரிலீஸ் ஆகின. பெரும் உழைப்பைக் கொட்டி வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குட்டி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வெற்றியைப் பெற்றது.

2011

ஆடுகளம், சிறுத்தை, காவலன் திரைப்படங்கள் வெளியாகின. ஆடுகளம், சிறுத்தை ஹிட் படங்களாக அமைந்தன. காவலன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் படமாக அமைந்தது.

2011 பொங்கல் ரிலீஸ்

2012

நண்பன் மற்றும் வேட்டை திரைப்படங்கள் வெளியாகின. நண்பன் விஜய் ரசிகர்கள், மாணவர்கள், குடும்பங்கள் என எல்லா பக்கமும் ஹிட் ஆனது. வேட்டை நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

2013

சமர், அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு திங்க ஆசையா படங்கள் வெளியாகின. சமர், அலெக்ஸ் பாண்டியன் படங்களை ரசிகர்கள் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாமல் போக, காமெடி படமான கண்ணா லட்டு திங்க ஆசையா ஹிட் ஆனது.

2014

ஜில்லா, வீரம் திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் ஹிட்!

2015 பொங்கல் ரிலீஸ்

2015

ஐ, டார்லிங், ஆம்பள படங்கள் போட்டிபோட்டன. அந்நியனுக்குப் பிறகு விக்ரம்-சங்கர் கூட்டணியில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ஐ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பொங்கல் வெற்றிக்குத் தேவையான காமெடி-மசாலா உடன் வந்த ஆம்பள குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. டார்லிங் படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

2016

தாரை தப்பட்டை, ரஜினி முருகன், கெத்து படங்களில் ரஜினி முருகன் ரசிகர்களாலும் குடும்பங்களாலும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்றது. தாரைத்தப்பட்டை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கெத்து, கதகளி திரைப்படங்கள் சுமாராகவே ஓடின.

ரஜினி முருகன்

2017

பைரவா, கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படங்கள் வெளியாகின. பைரவா ஹிட் ஆனது. கோடிட்ட இடங்களை நிரப்புக சுமாராக ஓடியது.

2018

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி மூன்று கமர்ஷியல் படங்களும் கமர்ஷியல் வெற்றியை பெறவே தடுமாறின.

2019 பொங்கல் ரிலீஸ்

2019

பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. இரண்டு படங்களும் பெரும் வெற்றியைப் பெற்றன.

2020

பட்டாசு, தர்பார் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. பட்டாசு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், தர்பார் வெற்றி பெற்றது.

2021

மாஸ்டர், பூமி, ஈஸ்வரன், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. மாஸ்டர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஆனது. ஈஸ்வரன் படம் சிம்பு நீண்ட நாட்கள் கழித்து நடித்ததால் எதிர்பார்ப்புடன் வெளியானது . பூமி, புலிக்குத்தி பாண்டி திரைப்படங்கள் சுமாராக ஓடின.

'மாஸ்டர்' விஜய்

2022

கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், தேள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மூன்று படங்களும் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில் சுமாரான வெற்றியைப் பெற்றன.

2023

துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் ஹிட் ஆகின. வாரிசு திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்படது.

2024 pongal release

2024

கேப்டன் மில்லர், அயலான், மேரி கிறிஸ்துமஸ், மிஷன் சாப்டர் 1 படங்கள் வெளியாகின. அயலான், கேப்டன் மில்லர் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. மிஷன் சாப்டர் 1 எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேரி கிறிஸ்துமஸ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நீங்கள் பொங்கல் FDFS -ல் பார்த்த படம் எது என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

`காங்கிரஸ் ஆதரித்தால் பினராயி விஜயனுக்கு எதிராக போட்டி'- எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பி.வி.அன்வர்

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், நிலம்பூர் தொகுதியில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வென்றவர் பி.வி.அன்வர். தொடர்ந்து 2-வது முறையாக சி.பி.எம் ஆதரவுடன் எம்.எல்.ஏ-வாக வென்றார். காங்கிரஸ் பாரம்பர்ய குடும்பத்தைச் சேர்ந்த பி.வி.அன்வர் காங்கிரஸ் கோட்டையாக இருந்த நிலம்பூரை தன்வசமாக்கியிருந்தார். இந்த நிலையில் பினராயி விஜயனின் ஆட்சி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பி.வி.அன்வர். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்த பி.வி.அன்வர் எம்.எல்.ஏ, கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக தனது தொகுதியான நிலம்பூர் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்தினார். தனது ஆதரவாளர்களை திரட்டி மலப்புறம் மாவட்டம், மஞ்சேரியில் டி.எம்.கே என்ற இயக்கத்தைத் தொடங்கினார். டொமாக்ரட்டிக் மூவ்மெண்ட் ஆஃப் கேரளா என்பதன் சுருக்கமான டி.எம்.கே கட்சி மூலம் மக்கள் பிரச்னைகளை முன் வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார் பி.வி.அன்வர். இந்த நிலையில் கருளாயி பகுதியில் காட்டு யானை மிதித்ததில் பழங்குடியின இளைஞர் மரணமடைந்த சம்பவத்தை கையில் எடுத்து போராடினார். வன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.வி.அன்வர் எம்.எல்.ஏ தலைமையில் சுமார் 40 பேர் நிலம்பூர் வனத்துறை அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதில் போலீஸுடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நிலம்பூர் வன அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக எம்.எல்.ஏ பி.வி அன்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். 24 மணி நேரத்தில் கோர்ட் ஜாமீனில் வெளியே வந்தார்.

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பி.வி.அன்வர்

இதற்கிடையே மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பி.வி.அன்வர். அக்கட்சியில் அவருக்கு கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ-வான பி.வி.அன்வர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருப்பதால் கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் அவரது பதவி பறிக்கப்படலாம் என்ற நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டசபை சபாநாயகர் சம்சீரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கடந்த சனிக்கிழமை அவர் இ மெயில் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்ததாகவும், இப்போது நேரில் வழங்குவதாகவும் பி.வி.அன்வர் தெரிவித்தார்.

பி.வி.அன்வர்

இதுகுறித்து பி.வி.அன்வர்கூறுகையில், "இனி நிலம்பூர் தொகுதியில் நான் போட்டியிடப்போவதில்லை. காங்கிரஸ் ஆதரித்தால் அடுத்த தேர்தலில் பினராயி விஜயனுக்கு எதிராக போட்டியிட தயாராக உள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்களை ஒருங்கிணைத்து 14 மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸுக்கு நிர்வாகிகளை நியமிக்க உள்ளேன்" என்றார்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? - பாடி வழிபடவேண்டிய பாடல்

பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த் தம். அதாவது, ‘மகிழ்ச்சி பொங்குதல்’, ‘பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு.

அவ்வகையில் நமக்குள் மகிழ்ச்சிப் பொங்கிப் பெருக வழிசெய்யும் அற்புத நாளாகத் திகழ்கிறது பொங்கல் பண்டிகை. இது, நம்மை வாழவைக்கும் இறைவனுக்கும் இயற்கைக் கும் நன்றிகூறி வழிபடும் திருநாளும் கூட!

கருப்பட்டிப் பொங்கல்!

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

புராணங்கள் தை முதல் நாளை மகரசங்கராந்தி எனப் போற்று கின்றன. சூரியன் - இந்த உலகின் ஆதாரம். ஆதவன் அளிக்கக்கூடிய ஆற்றலே நம்முடையதாக வெளிப்படுகிறது. அவருடைய வெப்பத் தால் உலகில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்து அனைத்து ஜீவ ராசிகளையும் வாழ்விக்கக் கூடிய சக்தி படைத்தவரே ஆதவன். அவரை வழிபடும் நாள் தைப்பொங்கல் திருநாள். 

ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் என்பதை அறிவோம். அதில், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்!

பொங்கல்

இதில், உத்தராயணப் புண்ணிய காலம் தொடங்குவது, தை மாதப் பிறப்பு அன்றுதான் (14.1.25 செவ்வாய்). இந்தத் தினத்தில் சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வார். தைப்பொங்கல் திருநாள் - இந்த வருடம் 14.1.25 செவ்வாய்க் கிழமை அன்று காலை 7:30 முதல்  8:30 மணி வரை அல்லது  காலை 10:30 முதல் 11:30 மணி வரை பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரமாகும். இயலாதவர்கள் நண்பகல் 12 முதல் 1 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்!

ஒவ்வொரு மாதமும் சூரியன் தனது பணியைத் தொடங்கும்போது, அவரை வாழ்த்தி வரவேற்பதாகவே, தமிழ் மாதத்தின் முதல் நாளில் சூரிய வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. இதனை மாத சங்கராந்தி அல்லது மாதப் பிரவேசம் என அழைப்பர். தை மாதத்தை மகர மாதம் என்பர். ஆகவே, இந்த நாளின் முதல் நாள்  மகரசங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாளில் சூரியனுக்கும் உலாத்திருமேனியாக விளங்கும் சோமாஸ்கந்தர் அல்லது சந்திரசேகர மூர்த்திக்கும் அபிஷேக அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

அன்றைய தினம் பொங்கல் பானையில் அரிசி, பால், வெல்லம், திராட்சை, முந்திரி போன்றவற்றை இணைத்து, அந்தப் பானையில் பசுமஞ்சள் கிழங்கை கங்கணமாக சுற்றி, சமைத்த பொங்கலைப் பொங்கியவுடன் ஆதவனுக்கு அர்ப்பணம் செய்து, தானும் தன்  குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் பகிர்ந்து சாப்பிட்டு  பெரியோரின்  ஆசிகளைப் பெற வேண்டும். 

பொங்கல்

சூரியதேவனை வணங்கும்போது 

ஓம் ஞாயிறே போற்றி

ஓம் ஆதித்யா போற்றி

ஓம் ஆதவா போற்றி

ஓம் பகலவா போற்றி

ஓம் பரிதி ஒளியே போற்றி

ஓம் கதிரோனே போற்றி

என்று போற்றி கூறி துதிப்பது மிகவும் விசேஷம்.

இங்ஙனம் வழிபடுவோருக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறை யும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

மட்டுமன்றி, பொங்கல் திருநாளில் ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்த நாளை மகிழ்ச்சியா கவும் அதே நேரத்தில் பொருள் அமைந்ததாகவும் ஆக்க நமது முன்னோர்கள் நம்மை பழக்கப் படுத்தியிருக்கிறார்கள்.

பொங்கல்

இந்த நாளில் முன்னோர்களைக் குறித்து தர்ப்பணம் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும். இந்நாளில் புண்ணிய நதிகளிலோ, கடலிலோ நாம், ஸ்நானம் செய்து தான தர்மங்களைச் செய்வதால், சிறந்த பலன்களை பெறலாம் என்கின்றன நீதி நூல்கள்.

வடமாநிலங்களில் சில பகுதிகளில், தை மாதம் முதல் நாளன்று, எமகண்ட நேரத்தில் காலன் பூஜை நடைபெறும். எமதருமனின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, மலர் சூடி, எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபடுவர். இதனால் எமபயம் நீங்கும், துர்மரணம் மற்றும் விபத்துகள் நிகழாது என்பது நம்பிக்கை. 

பொங்கல் திருநாளில் படிக்க வேண்டிய விசேஷ துதிப்பாடல்:

அடையபலம் மகான் அப்பய்ய தீட்சிதரால் இயற்றப்பட்டது ஆதித்ய ஸ்தோத்திர ரத்னம். இது 14 பாடல்களையும் ஒரு பலச்ருதியையும் கொண்டுள்ளது.  இதில் 12வது பாடல் சூரியனை சிவபெருமானின் வடிவமாகப் போற்றுகிறது. அதனை இங்கு காணலாம்.

ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம்

ஆதித்யே மண்டலார்ச்சிக புருஷ

விபிதயா தியந்த மத்யாகமாத்மந்

யாகோபாலங்கனாப்யோ நயநபத ஜூஷா

ஜியோதிஷா தீப்யமானம்!

காயத்ரி மந்த்ர ஸேவ் யம் நிகில ஜநதியாந்

ப்ரேரகம் விச்வரூபம்

நீலக்ரீவம் திரிநேத்திரம் சிவம் அநிசம்

உமா வல்லபம் ஸ்ம்சிரயாமி

கருத்து: சூரியன் உருவில் விளங்கி ஒளிர்பவனும், உலக உயிர்களை தோற்றம் முதல் அழிவு வரை பேணி வளர்ப்பவனும், வேள்வித் தீயை ஒத்த தன் கண்களால் அனைத்து ஒளிகளையும் பிரகாசிக்கச் செய்பவனும், காயத்ரீ மந்திரத்தால் வணங்கப்படுபவனும், அறிவை இயக்குபவனும், உலகினை தன் வடிவாய்க் கொண்டவனும், நீலகண்டமும் மூன்று கண்களையும் கொண்டு உமையொருபாகனாக விளங்குபவனுமாகிய சிவபெருமானை இடைவிடாது சிந்திக்கிறேன்!

பொங்கல்

மாட்டுப்பொங்கல் வழிபாடு

தைப்பொங்கலுக்கு மறுநாள் (15.1.25) மாட்டுப்பொங்கல். உலகுக்கே தாயாகவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்பத்தை அளிக்கக்கூடியதுமான கோமாதா என்று போற்றக்கூடிய பசுவையும், காளைகளையும் சிறப்பாக வழிபட சிறந்த நாள்! 

மகாலட்சுமி மட்டுமின்றி அனைத்துத் தெய்வங்களும் பசுவில் வாசம் செய்வதாக ஐதீகம்! எனவே, பசுவுக்கான அனைத்து வழிபாடுகளைச் செய்வது உத்தமம். பசுவுக்கு உணவளிப்பதும் அதனைப் பராமரிப்பதும் நம் பாவங்களை விலக்கி, சகல சௌபாக் கியங்களையும் தரும் என்பதை அறிந்து, வணங்குங்கள்!

மட்டுமன்றி அருகில் உள்ள பசு மடங்களுக்குச் சென்று பசுவை வழிபடுவதால், அளவற்ற இன்பம், சகல காரியங்களிலும் நன்மை, அழியாச் செல்வம் எனப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

இந்தத் தினத்தில்  காலை நீராடுவதற்கு முன், பெண்கள் அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு (இருந்தால்) சென்று, அவர்களின் சகோதரர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பச்சை சாதம் (வெற்றிலை பிழித்து கலந்தது), வெள்ளை சாதம், சிவப்பு சாதம் (குங்குமம் கலந்தது), மஞ்சள் சாதம் (மஞ்சள் கலந்தது), சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஐந்து விதமான அன்ன வகைகளை பிடிப்பிடியாக இலையில் வைத்துக் கடவுளை வேண்டுவது வழக்கம். 

இதுபோன்று சகோதரர்களும் தங்கள் சகோதரிகளுக்குத் தங்களால் இயன்ற பரிசுப் பொருட்களை அளித்து மகிழ்வது இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்!

பொங்கல்

காணும் பொங்கல்!

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அலைபேசியில் பேசி, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் சூழல் இது!  எனினும், இது போன்றவற்றிலிருந்து நாம் விடுபட்டு அன்பையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொள்ளுதல் மிகவும் முக்கியம். அதற்கான நாள்தான் காணும் பொங்கல் திருநாள். இந்த நாளில் குடும்பத்தார் அவர்களின் நெருங்கிய உறவினருடனோ, நண்பர்களுடனோ சுற்றுலா மையங்களுக்குச் சென்று, பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும்!

Health: சிறுபீளை, ஆவாரை, மஞ்சள், இஞ்சி... பொங்கல் பண்டிகையில் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்!

பொங்கல் நேரத்தில் நாம் உண்கிற, பயன்படுத்துகிற அத்தனை பொருள்களும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. அது தெரியாமலே பலரும் காலங்காலமாக அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பொங்கலுக்குப் பயன்படும் பலவித மூலிகைகளின் மருத்துவப் பலன்களை விவரிக்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார்..

பொங்கல் வழிபாடுகள்

''சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, பேய் மிரட்டி இலை அல்லது பெரும் தும்பை, ஆவாரை ஆகியவற்றைக் கொத்தாகக் கட்டி, நிலை வாசலில் செருகுவார்கள்.

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நாம் அருந்தும் நீரின் அளவு குறைந்து விடும். இதனால், சிறுநீரகத்தில் உருவாகும் சிறு சிறு கற்களைக் கரைக்கும் தன்மை சிறுபீளைக்கு உண்டு. வேப்பிலையும் மாவிலையும் கிருமிநாசினிகள். பெரும் தும்பை தலைபாரம், நீர்க்கோவை, சளி என குளிர்காலம் தொடர்பான பிரச்னைகளைச் சரி செய்யும். ஆவாரைக்கு சருமப் பிரச்னைகளை குணப்படுத்துவது முதல், ரத்தச் சுத்திகரிப்பு வரை பல குணங்கள் இருக்கின்றன.

சில கிராமங்களில் மாடுகளுக்குப் பிரண்டை மாலை அணிவிப்பார்கள். சுண்ணாம்புச்சத்தின் அவசியத்தை உணர்த்துவதற்கானது இது.

மஞ்சள், புற்றைத் தடுக்கும்; இஞ்சி உடலை உறுதியாக்கும் காயகற்ப மூலிகைகளில் ஒன்று.

மொச்சை

பல காய்க் குழம்பில் சேர்க்கப்படுகிற மொச்சையில் புரதம் அதிகம். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம். மஞ்சள் பூசணியில் துத்தநாகச் சத்து அதிகம்.

மாவுச்சத்து, புரதம், கொழுப்பு மூன்றும் சேர்ந்த சமச்சீர் உணவு, பொங்கல். இதில் சேர்க்கப்படும் வெல்லம் நாவின் உமிழ்நீர் சுரப்பியிலிருந்து வயிற்றுக்குள் இருக்கிற செரிமான என்சைம் வரை அனைத்தையும் தூண்டிவிடும்.

தாது உப்புகள் நிறைந்த கரும்பு, பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் கொடுக்கக்கூடியது.''

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Ajith Interview: ``அஜித் வாழ்க! விஜய் வாழ்க நீங்க எப்போ வாழப்போறிங்க?'' - துபாயில் அஜித் பேட்டி

அஜித்தின் ரேஸிங் குறித்தான பேச்சுதான் எங்கும் நிரம்பியிருக்கிறது.

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் `அஜித்குமார் ரேஸிங் டீம்' 992 பிரிவில் முன்றாவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்திருக்கிறது. பலரும் அஜித்தின் இந்த வெற்றி முகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் தற்போது துபாயில் பேட்டியளித்திருக்கிறார். துபாயிலுள்ள `Gulf News' ஊடகத்திற்குப் அளித்த பேட்டியில் வெற்றி , தோல்வி குறித்தும் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கும் நச்சுதன்மை குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் அஜித்.

பயணமும் விளையாட்டும் மிக முக்கியமானது!

அந்தப் பேட்டியில் அவர், ``எனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். அதிகமாக பயணம் செய்வதை நான் எப்போதும் விரும்புவேன். இந்த விஷயங்களெல்லாம் என்னை ஊக்குவிக்கும். என்னுடைய வேலையை புத்துணர்ச்சியுடன் தொடர்வதற்கு இவையெல்லாம் ரீசார்ஜ் செய்யும். நான் என்னுடைய குழந்தைகளிடம் கல்வியை கற்கச் சொல்வேன். தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளக் கூறுவேன். பயணம் செய்வது வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் மற்றும் விளையாட்டுகளிலும் நாம் ஈடுபட வேண்டும். பயணம் செய்யும்போது வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்க முடியும். `முன் சந்திக்காத மனிதர்களையும் மதங்கள் வெறுக்கச் செய்யும்' என்ற பிரபலமான கூற்று ஒன்று இருக்கிறது.

Ajith at Dubai 24H Series

இது உண்மையானதும்கூட. இது கிணத்துக்குள் இருக்கும் தவளையைப் போன்றது. பயணம் செய்யும்போது நீங்கள் எவ்வளவு சிறியவர்கள், இந்த உலகம் எவ்வளவு சிறியது என்பது உங்களுக்குப் புலப்படும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது வெற்றியையும் தோல்வியையும் கருணையுடன் கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள். இதனால்தான் பயணமும் விளையாட்டும் மிக முக்கியமானது. வெற்றியைவிட தோல்வியே உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். தோல்வி ஒவ்வொரு முடிவையும் எவ்வளவு கவனமாக எடுக்க வேண்டும் என்பதை சொல்லி தரும். நடிக்கும்போது சொதப்பினால் ரீடேக் எடுத்துக் கொள்ளலாம். டென்னிஸ் விளையாடும்போது சர்வீஸில் சொதப்பினால் மீண்டும் முயற்சி செய்யலாம்.

ஷாலினி மற்றும்  குழந்தைகளின் உறுதுணையில்லாமல் என்னால்...

ஆனால், ரேஸிங் பொறுத்தவரையில் இந்த ரீ டேக் கிடையாது. எந்த துறையாக இருந்தாலும் உங்களை சுற்றி நல்ல மனிதர்கள் இருக்க வேண்டும். என்றவர், ``நீங்கள் எதை தேர்ந்தெடுத்து செய்கிறீர்களோ அதை திறம்பட செய்யுங்கள் என்று நான் கூறுவேன். வெற்றிக்கு எப்போதும் உங்களின் குடும்பத்தின் உறுதுணை மிகவும் முக்கியமானது. என்னுடைய மனைவி ஷாலினி மற்றும் என்னுடைய குழந்தைகளின் உறுதுணையில்லாமல் என்னால் இந்த விஷயத்தை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது. நீங்கள் ஒரு விஷயத்தை அடைய நினைக்கும்போது உங்களின் ஆர்வத்தை உங்களின் குடும்பத்தாரிடம் தெரியப்படுத்துங்கள். அவர்களிடமிருந்து உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். சாலை விபத்துகளில் நிறைய இளைஞர்கள் உயிரிழப்பதையும் காயமடைவதையும் நான் பார்க்கிறேன்.

Ajith at Dubai 24H Series

இப்படியான விஷயங்கள் மற்றவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. ஆனால், ரேஸிங் டிராக் பொறுத்தவரையில் இங்கு மெடிக்கல் சப்போர்ட் இருக்கும். உங்களுடைய வாகனங்கள் பாதுகாப்பனதாக இருக்கும். சாலை விபத்தில் சிக்கிய என்னுடைய நண்பர் ஒருவருக்கும் ஸ்பைனல் கார்ட் காயமடைந்திருக்கிறது. ஆதலால் பல விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். மோட்டார் ஸ்போர்ட்ஸ் எப்போதும் பாதுகாப்பாக இருக்காது. சிறந்த வாகன ஓட்டிகளும் ரேஸிங் டிராக்கில் விபத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். ரேஸர் மைக்கேல் ஸ்கூமேச்சர் அப்படி விபத்தில் சிக்கியிருக்கிறார்.

இப்படியான விஷயங்கள் நடக்கதான் செய்யும். நாம் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவை சந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ரேஸிங்கில் என்னென்ன விளைவுகள் இருக்குமென்பது எனக்கு தெரியும். நல்ல நாட்ளும் இருக்கும் அதே சமயம் கெட்ட நாட்களும் இருக்கும். விளைகளை சமாளிக்க அதற்கேற்ப நம்மை தயார்ப்படுத்திக் கொண்டு சரியான உபகரணங்களை தேர்வு செய்ய வேண்டும்.

Ajith at Dubai 24H Series

நான் இப்போது ஒரு ரேஸிங் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். பலரும் ஃபேன்ஸி மோட்டார் சைக்கிளுக்கு செலவிடுவதை நான் பார்க்கிறேன். ஆனால், அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களான ஹெல்மட் போன்றவற்றில் கவனம் செலுத்த தவறிவிடுகிறார்கள். என்னுடன் பயணம் செய்யும் என்னுடைய நண்பர்களுக்கு நான் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து எடுத்துச் சொல்வேன்." என்றார்.

மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது!

மேலும் பேசிய அஜித், ``இன்றைய தேதியில் சமூக வலைதளப் பக்கங்களில் நச்சுத்தன்மை நிரம்பியிருக்கிறது. இன்று உலகமெங்கும் உள்ள மக்களுக்கு மென்டல் ஹெல்த் ஒரு முக்கியமான பிரச்னையாகவும் இருக்கிறது. அவர்களுடைய மென்டல் ஹெல்த்தை அவர்கள் இழக்கிறார்கள். சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலரும் அதை இழக்கிறார்கள். வாழ்க்கை மிகவும் சிறியது என்று என்னுடைய ரசிகர்களுக்கு நான் கூறுவேன். `எண்ணம் போல் வாழ்க்கை' என்ற கூற்று இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவே உங்களுடைய வாழ்க்கை என்பதுதான் இதற்கு அர்த்தம்.

Ajith at Dubai 24H Series

உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்களே....படத்தை பாருங்கள். `அஜித் வாழ்க, விஜய் வாழ்க' எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள். நான் உங்களுடைய அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையை கவனியுங்கள். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன்." எனப் பேசியிருக்கிறார்.

Vikatan play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

இந்த வார ராசிபலன் ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரை #VikatanPhotoCards

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies