மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் மீது 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஆசிட் வீசியதில் 2 மாணவிகள் காயமடைந்தனர். மீனா (17) மற்றும் அங்காளஈஸ்வரி (18) இருவரும் திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் படித்து வருகிறார்கள், நேற்று மேலும் இரண்டு மாணவிகளுடன் கல்லூரி முடிந்து திரும்பி வரும்போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம நபர் இருவர் மீதும் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து ஊற்றி விட்டு தப்பியோடினார்.
இதில் மீனாவுக்கு முகத்தின் வலதுபுறம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட உறுப்புகள் கருகின. மேலும், ஆசிட் சிதறி தெறித்ததில் அருகில் சென்ற அங்காள ஈஸ்வரிக்கும் தோள்பட்டை, கைகள் வெந்தன. ப்ரவுன் சட்டை போட்டுக்கொண்டிருந்த ஒரு ஆள் தான் ஆசிட் வீசியுள்ளார் அவரை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.
மீனாவின் தந்தை உதயசூரியன் என்பவர் 20 நாட்களுக்கு முன் தான் இதயநோயால் இறந்து போன நிலையில் இம்மாதிரி கொடூர சம்பவம் மீனாவுக்கு நடந்துள்ளது.
ஆசிட் வீச்சு நடந்த உடன் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பாதிக்கப்பட்ட இருவரும் மோட்டார் சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
ஆசிட் விற்பனையில் கட்டுப்பாடு இருந்தும் எப்படி இவர்களுக்கு ஆசிட் கிடைத்தது? ஆசிட் விற்பனை கட்டுப்பாடு வெறும் ஏட்டளவில் தானா?