இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ’பாரத ரத்னா’
வழங்கப்பட்டதன் பின்னணியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் இருந்ததாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சாதனை வீரர் சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் திறமையை
கவுரவிக்கும் வகையில், இவர் ஓய்வு பெற்ற சில மணி நேரங்களில், நாட்டின்
உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
இவ்விருது மறைந்த ‘ஹாக்கி ஜாம்பவான்’ தியான்சந்த்துக்கு தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஓட்டு வங்கி அரசியலுக்காக இவரை புறக்கணித்துவிட்டு, கடைசி நேரத்தில்
சச்சினை தெரிவு செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதன் பின்னணியில் காங்கிரஸ்
துணைத் தலைவர் ராகுல் இருந்ததாக தெரிகிறது.
அதாவது, 2013, நவம்பர் 14ல் சச்சினின் கடைசி டெஸ்ட், மும்பையில்
தொடங்கியது. நாடு முழுவதும் இவருக்கு எழுந்த ஆதரவு அலையை ராகுல் தனக்கு
சாதகமாக பயன்படுத்த விரும்பியுள்ளார்.
இதனை மனதில் வைத்து சச்சினின் ஆட்டத்தை பார்க்க மும்பை கிளம்பி
இருக்கிறார். அப்போது பிரதமர் அலுவலகத்துடன் ‘பாரத ரத்னா’ விருது தருவது
குறித்து பேசியுள்ளார்.
உடனே, சச்சின் குறித்த விவரங்களை அனுப்புமாறு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகம் தகவல் அனுப்பியுள்ளது.
மாலை 5.22 மணிக்கு சச்சினின் விவரங்களை பெற்றது பிரதமர் அலுவலகம். மறுநாள்
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு ஒப்புதல் தரும்படி, ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார். அவரும் அன்றே கையெழுத்திட மறுநாள்
விருது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுவாக ‘பாரத ரத்னா’ விருது பெறுபவரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும்.
இதன்படி 2013, யூலை 16ல் தியான்சந்த் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம்
பரிந்துரை செய்தது.
அதே சமயம் விருது அறிவிப்புக்கு மூன்று நாட்கள் முன் வரை சச்சின் பெயரை
யாரும் பரிந்துரை செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி
தெரிய வந்துள்ளது.
மொத்தத்தில், சச்சின் விடயத்தில் எவ்வித விதிகளும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இதன் பின்னணயில் ராகுல் உள்ளாரா என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை.
ஆனால், ஐந்து மணி நேரத்தில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதைப்
பார்த்தால் இந்த விடயத்தில் ராகுல் தலையிட்டுள்ளார் என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.