திரையுலகில் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வெல்வது வாழ்நாள் கெளரவமாகத் திரையுலகினர் கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழிப் படங்கள், பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்படும். அதன் அடிப்படையில், நடப்பாண்டு ஆஸ்கர் விருதிற்கான 'சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவு' போட்டிக்கு அனுப்ப, இந்தியா சார்பில் மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான் ஆகிய 6 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 29 படங்களைப் பரிசீலித்தது.
இதில், இந்தியில் வெளியாகி நாடுமுழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற 'லாபத்தா லேடீஸ்" படத்தை ஆஸ்கர் விருதிற்கான படமாக பரிந்துரைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ``இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``கொட்டுக்காளி, தங்கலான், வாழை, மஹாராஜா உள்ளிட்ட கதையும்-கருத்தும்-தாக்கமும் மிகுந்த தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைப்பதற்காகபட்டியலில் இருந்தும், இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது! இந்தி திரைப்படமான 'லாபதா லேடீஸ்' பல்வேறு கருத்துக்களை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை!
என்ன மொழியில் படம் உள்ளது என்பதை பார்க்காமல் திரை மொழியில் மக்கள் வாழ்வியலுடன் உணர்ந்து பார்த்த படங்களை அங்கீகரிப்பதே ஆஸ்கருக்கு நாம் போடும் அடித்தளம். இந்தியாவில் மட்டும் தான் ஆஸ்கர் விருதிற்கான தேர்வின் விதத்தினால் திரைப்படம் இங்கேயே தோற்று விடுகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.