BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 23 September 2024

Badlapur: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் போலீஸாரால் சுட்டுக்கொலை; உடலை வாங்கத் தாய் மறுப்பு

கடந்த மாதம் மும்பை அருகில் உள்ள பத்லாபூரில் தனியார்ப் பள்ளியில் வைத்து நர்சரி வகுப்புகளில் படித்து வந்த இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அக்‌ஷய் ஷிண்டே என்பவர் கடந்த மாதம் 17ம் தேதி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பத்லாப்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்‌ஷய் ஷிண்டே தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறை கடந்த 16ம் தேதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இயற்கைக்கு மாறான முறையில் உறவு வைத்துக்கொண்டதாக அக்‌ஷய் ஷிண்டே மீது அவரது இரண்டாவது மனைவி காவல்துறையில் புகார் செய்து இருந்தார். அப்புகாரின் அடிப்படையில் ஷிண்டேயிடம் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று மாலை ஷிண்டேயை காவல்துறை தலோஜா சிறையிலிருந்து காவல்துறை வாகனத்தில் பத்லாபூருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

காவல்துறை வாகனம் மும்ப்ரா பைபாஸ் ரோட்டில் வந்தபோது, திடீரென அக்‌ஷய் ஷிண்டே தனது அருகில் அமர்ந்திருந்த காவலரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார். இதில் சில காவலர்கள் காயம் அடைந்தனர். உடனே ஆய்வாளர் சஞ்சய் ஷிண்டே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஷிண்டே மீது சுட்டார். இதில் தோட்டா ஷிண்டே தலையில் பட்டது. காவல்துறை வாகனம் சென்று கொண்டிருக்கும்போது துப்பாக்கிச் சண்டை நடந்தது. இத்துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஷிண்டே கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் அங்கிருந்து ஜூபிடர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், "குற்றவாளி காவல்துறையினரின் துப்பாக்கியைப் பிடுங்கிச் சுட்டதால் காவல்துறை தற்பாதுகாப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டனர்" என்றார். ஷிண்டேயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஆய்வாளர் சஞ்சய் ஷிண்டே இதற்கு முன்பு தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் கேஸ்கரை பிடித்த தனிப்படை காவல்துறை குழுவில் இடம் பெற்று இருந்தார். அதோடு என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட் பிரதீப் சர்மாவின் 'மிரட்டி பணம் பறித்தல் தடுப்பு பிரிவிலும்' இடம் பெற்று இருந்தார்.

அக்‌ஷய் ஷிண்டேயை தலோஜா சிறையிலிருந்து பத்லாப்பூருக்கு அழைத்து வரும்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அக்‌ஷய் ஷிண்டே அழைத்து வரப்பட்ட வாகனத்திற்குப் பின்புறம் மற்றொரு காவல்துறை வாகனம் பாதுகாப்புக்கு வந்தது.

காவல்துறை போலி என்கவுண்டரில் அக்‌ஷய் ஷிண்டேயை கொலை செய்துவிட்டதாக அக்‌ஷய் ஷிண்டேயின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் தற்பாதுகாப்புக்காகத்தான் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் தெரிவித்துள்ளார். காவல்துறையும் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

உடலை வாங்க மறுப்பு

அக்‌ஷய் ஷிண்டேயின் தாயார் இது குறித்து அளித்த பேட்டியில், "எனது மகன் கொசுவைக்கூடக் கொன்றது கிடையாது. அப்படி இருக்கும் போது எப்படி துப்பாக்கியைப் பிடுங்கிச் சுடுவான். இது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்ததோடு அக்‌ஷய் ஷிண்டே உடலை வாங்க மறுத்தார். இத்துப்பாக்கிச்சூடு குறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகளும் இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

பள்ளியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றிய அக்‌ஷய் ஷிண்டே (24) இரு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி பத்லாபூரில் பொதுமக்கள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பந்த்தின்போது பத்லாபூர் ரயில் நிலையத்தில் 10 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வன்முறையில் இறங்கினர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளியைச் சிறுமியின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து இச்சம்பவம் நாடு முழுவதும் வைரலாக பரவியது. எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்து பின்னர் அதனைக் கைவிட்டனர்.

police

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அக்‌ஷய் ஷிண்டே துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பத்லாபூர் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இத்துப்பாக்கிச் சூட்டுக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சட்டமன்ற உறுப்பினர்.ராஜு பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார், இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளியை அழைத்துச் சென்றபோது காவல்துறை கவனக்குறைவாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies