வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் புதன்கிழமை முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் உருவான சில காற்றழுத்த தாழ்வு நிலைகளால் தொடர் மழை பெய்தது. அதன் பிறகு சில நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவியது. இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் உருவாகியுள்ளதால், மழை தொடர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியது: தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக புதன்கிழமை முதலே தமிழகத்தில் மழை தொடங்கும். இந்த மழை மேலும் சில நாள்களுக்கு தொடரும் என்றார் அவர்.வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் ஆங்காங்கே புதன்கிழமை கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை பெய்யும்.இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் 80 மி.மீ. மழையும், உடுமலைபேட்டையில் 60 மி.மீ. மழையும் பெய்துள்ளது. குன்னூர் (50 மி.மீ.), சிவகிரி, ஒரத்தநாடு, மன்னார்குடி, போடி (30 மி.மீ.), தென்காசி, கொடைக்கானல், கேட்டி (20 மி.மீ.), பெரியகுளம், சாத்தான்குளம், பொள்ளாச்சி, ஆத்தூர், பவானி, செங்கோட்டை, வால்பாறை (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.