BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 17 November 2014

2ஜி : சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் விசாரணை தொடங்கியது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு, சில தனியார் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக ரூ.200 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியம் பதிவு செய்யும் நடைமுறை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.இந்த வழக்கின் புகார்தாரரும், மத்திய அமலாக்கத் துறையின் இணை இயக்குநருமான ஹிமான்ஷு குமார் லால், சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவரிடம் புதன்கிழமையும் (நவம்பர் 19) தொடர்ந்து சாட்சியம் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார். அரசுத் தரப்பு சாட்சியம்: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீங்கலாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்பட 9 பேரும், ஒன்பது நிறுவனங்களின் பிரதிநிதிகளும் புதன்கிழமை முதல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் திங்கள்கிழமை நடந்த விசாரணையின் முடிவில் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மத்திய அமலாக்கத் துறை சார்பில் அரசுத் தரப்பு சாட்சியங்களாக திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி உள்பட 30 பேரிடம் சாட்சியம் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி அனுமதி அளித்தார். இதன்படி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை இணை இயக்குநர் ஹிமான்ஷு குமார் லால் முதலாவது அரசுத் தரப்பு சாட்சியாக திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியத்தை பதிவு செய்தார்.அவரிடம் அமலாக்கத் துறை சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர், "2ஜி அலைக்கற்றை விவகாரத்தை எந்த அடிப்படையில் மத்திய அமலாக்கத் துறை அணுகியது? சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய என்ன காரணம் இருந்தது? போன்ற கேள்விகளை எழுப்பினார். அவற்றுக்கு ஹிமான்ஷு குமார் லால் தெரிவித்த பதிலை சிறப்பு நீதிபதி சைனி பதிவு செய்து கொண்டார். அதன் விவரம்: சிபிஐ தொடுத்த வழக்கின்படி விசாரணை: "2012, டிசம்பர் 27ஆம் தேதி மத்திய அரசின் உத்தரவின்படி, மத்திய அமலாக்கத் துறையின் தலைமையகத்தில் இணை இயக்குநராகப் பொறுப்பேற்றேன். அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, துணை குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் சில தனியார் நிறுவனங்களுக்கும் கலைஞர் டிவிக்கும் இடையே சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி விசாரணை தொடங்கினோம். மத்திய அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குநர்கள் கமல் சிங், சத்தியேந்திர சிங் ஆகிய மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவினரின் உதவியுடன் விசாரணை நடத்தினோம். பண மோசடித் தடுப்புச் சட்டம், 2002-இன்படி இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், சாட்சிகளின் விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன' என்றார் ஹிமான்ஷு குமார் லால்.

கூடுதல் சாட்சியங்கள்: இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்பட 5 பேரை கூடுதல் சாட்சியங்களாக சேர்க்கக் கோரி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) பிறப்பிப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி குறிப்பிட்டார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies