சீன எதிர்ப்பையும் மீறி, தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்வது தொடர்பாக இந்தியா-வியத்நாம் இடையே செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்த வியத்நாம் பிரதமர் குயென் டான் டங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய உறவுகள், பிராந்திய விவகாரங்கள், சுமுகமான கடல் போக்குவரத்து ஆகியவை குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா-வியத்நாம் இடையேயான மற்றொரு எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
ராணுவ ஒத்துழைப்புக்கு இந்தியா இசைவு : இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
- வியத்நாமின் கடற்படைக்கு வலுசேர்க்கும் விதமாக இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான 4 ரோந்துக் கப்பல்கள் அந்நாட்டுக்கு வழங்கப்படும்.
- இரு நாட்டு ராணுவங்கள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகைகள், ராணுவக் கருவிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றில் கூடுதல் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
- வியத்நாம் விமானப் படையினருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை இந்தியா அளிக்கும்.
- பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துதல், கடற்படையினருக்கு பயிற்சி, ராணுவத் தரம் மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் பரஸ்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கும்.
- தென் சீனக் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதற்கோ, அங்கு விமானங்கள் பறப்பதற்கோ எந்த நாடும் தடைவிதிக்க முடியாது என்ற உறுதிப்பாட்டை இரு நாடுகளும் எடுத்துக்கொள்ளும்.