விமான நிலையத்தில் போலீஸார் விட்டுச் சென்ற வெடிபொருளை பெண் பயணி ஒருவர் போலீஸாரிடம் ஒப்படைத்த வினோத சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.
அந்நாட்டின் சிட்னி விமான நிலையத்துக்கு வந்த பயணியின் சூட்கேஸ் சேதமடைந்ததால், அதற்குப் பதிலாக தங்களிடமிருந்த, உரிமை கோரப்படாத பெட்டி ஒன்றை விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் அளித்தனர். வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த அந்தப் பயணி, அதில் பிளாஸ்டிக் வெடிபொருள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்தப் பெட்டியை ஒப்படைத்தார்.
பெட்டியில் வெடிபொருள் இருந்ததை அறிந்த போலீஸார், உடனடியாக காவல் நிலையக் கட்டடத்தலிருந்த அனைவரையும் வெளியேற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த வெடிபொருள் மத்திய காவல்துறைக்குச் சொந்தமானது எனவும், கடந்த மாதம் நடைபெற்ற மோப்ப நாய் பயிற்சியின்போது, பயிற்சியாளர் அதனை விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இறுதியில், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட மத்திய காவல்துறை, "வெடிபொருளை விட்டுச் சென்ற பயிற்சியாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெறும்' என்று கூறியுள்ளது.