சேலம் மாவட்டம், ஆத்தூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது கள்ள ரூபாய் நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர் கிருஷ்ணன் என்பவர் பணம் எடுத்தார். அதில் 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல முருகேசன் என்பவர் பணம் எடுத்தபோதும் ரூ. 3 ஆயிரம் மதிப்பில் கள்ள நோட்டுகள் வந்தது. இதைத் தொடர்ந்து, 5 பேர் பணம் எடுத்தனர். அவர்களுக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. இதனால், அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகளை அளிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.