BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 5 October 2014

மோசமான முன்னுதாரனமாகும் பள்ளியடைப்பு போராட்டம் - ஊழல் தப்பில்லை என்பதை மாணவர்களிடம் விதைக்கிறோமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனைபெற்றுள்ளார், இதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய அதிமுகவினர் பஸ்சை கொளுத்துதல், கடையடைப்பு என்று ஆரம்பித்த போதும் கூட பொதுமக்கள் இது ஏதோ ஒன்றிரண்டு நாட்கள் நடைபெறும் என்று நினைத்தனர், ஆனால் கட்சிகாரர்கள் மட்டும் நடத்திய போராட்டம் திரைப்படத்துறையினர், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் என்று மாறியது, அனைத்துக்கும் மேலாக நாளை தனியார் பள்ளிகள் இந்த தண்டனை விதிப்பை எதிர்த்து விடுமுறை அளித்துள்ளார்கள், இது குறித்து தற்போது நார்வேயில் வசித்து வரும் இல கோபால்சாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதை இங்கே பதிவிடுகிறோம்.

நான் அப்போது நார்வே நாட்டிற்க்கு வந்த புதிது. உடன் பணிபுரியும் நண்பர்களிடம் ஆர்வ மிகுதியில் உள்நாட்டு சங்கதிகளை அளவுக்கதிகமாகவே கேட்டு தெரிந்து கொண்டிருந்த தருணம். கல்வி, பள்ளி குறித்த பேச்சு எழுந்தது. நான் சொன்னேன், பல்வேறு மதம், மொழி, கலாசாரம் நிலவும் நாடு என்னது. நான் பயின்ற பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும், அதில் கீதை, பைபிள், குரான் மூன்றில் இருந்தும் ஒரு பத்தி வாசிப்பார்கள். அது போல அல்லது மாரல் ஸ்டடிஸ் போன்ற ஏதேனும் இங்கே உண்டா என்றேன்.

அவர் சொன்னார்.. அப்படி எதுவும் கிடையாது. குறிப்பாக கடவுள் என்பது குறித்தே பள்ளிகளில் ஆசிரியர்கள் பேசுவதில்லை. அதில் மிகக் கவனம் தேவை என்றார். எனக்கு மிகுந்த வியப்பாகப் போயிற்று. நார்வே ஒரு கிருத்தவ நாடுதானே? பிறகு ஏன் இந்தக் கட்டுப்பாடு? என்றேன். அதற்கு அவர் சொன்னார். இது கட்டுப்பாடு என்பதைக் காட்டிலும் நாகரீகம் எனலாம். கடவுள் நம்பிக்கை அற்ற , வேற்று மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும் இருப்பார்கள். அவர்களது உணர்வை எவ்வகையிலும் காயப் படுத்திவிடக் கூடாது. மேலும் குழந்தைகள் அவர்கள். அவர்கள் முன்னிலையில் கடவுள் குறித்தோ, சமயம் குறித்தோ ஏதேனும் பேசினால் பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள், அது பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிடும் என்றார். அதே விவாதத்தின் போக்கில் வேறொரு கட்டத்தில், இங்குள்ள முறை என்னவென்றால் பிள்ளைகளுக்கு பெற்றோரும் சரி, பள்ளியும் சரி, சின்ன வயதிலேயே நாட்டின் சட்டங்கள் குறித்துப் பயிற்றுவித்து அதன் படி நடக்க வலியுறுத்துவார். அதனால் தான் விதிகளைக் கடைபிடிப்பதில் அதிக ஆர்வமும், பெருமிதமும் எங்களுக்கு உண்டு என்றார்.

இந்தப் பின்னணியில் தமிழகத்தில் நாளை நடைபெற இருக்கும் நூதன போராட்டம் குறித்து எண்ணிப் பார்க்கிறேன். நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட ஒரு அரசியல்வாதிக்கு ஆதரவாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப் படுகின்றன. எழுதப் படாத பதாகைகளான ஏதுமறியா அந்தக் குழந்தைகளின் எண்ணத்தில் எதை எழுதும் இந்தப் போராட்டம்? அடைக்கப்படும் பள்ளிகள் எல்லாம் தாமாகவே முன்வந்து இம்முடிவை அறிவித்தார்களா ? அல்லது மிரட்டப்பட்டார்களா என்பது வேறு கேள்வி...

நாட்டில் இத்தனை பிரச்சனைகள் இருந்தும் நாடு நாசமாகாமல் இருப்பதற்கு ஒரு காரணம் சுயாதீனமாக இயங்கும் நீதித்துறை என்பது மக்களாகிய நமக்கெல்லாம் ஆறுதல் தரும் விடையம். அந்தத் நீதித்துறையே தவறு அல்லது முறையாக இயங்கவில்லை அல்லது அதை மதிக்க வேண்டியதில்லை என்கிற கருத்தை பிஞ்சு மனதில் விதைக்கவா? அல்லது, உள்ளே சென்றவர் தியாகி என்றா? அல்லது ஊழல் செய்வது தவறு அல்ல என்றா? இந்தப் பாடத்தைப் பெற்று வளரும் வருங்கால தலைமுறையினரின் சிந்தனை ஓட்டம் எவ்வாறு அமையப் பெறும் ? அவர்கள் உருவாக்கும் வருங்கால தமிழகம் எவ்வாறு இருக்கும்? அதில் உங்கள் சந்ததிகள் எவ்வாறு பிழைக்கும்? என்பதெல்லாம் அரசியல் கடந்து இயல்பாக எழ வேண்டிய கேள்விகள்.

அய்யா.. நீங்கள் உத்தமாரோ, ஊழல்வாதியோ... உங்கள் அரசியலை கட்சி, வட்டம், மாவட்டம் , வீதி என்கிற அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் குப்பைப் படைப்புகளை பாடத்திட்டத்தில் வைப்பது, ஊழல் கைதுகளைக் கண்டித்து பள்ளிக் குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது போன்ற பிஞ்சு மனதில் நஞ்சைக் கலக்கும் தேச துரோகத்தை செய்யாதீர்கள். தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும், அவர்கள் வாழப்போகும் நாட்டின் வருங்காலம் குறித்தும் அக்கறை கொண்ட எவனும் இதைச் செய்ய மாட்டான்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies