ஜப்பானின் அன்டாகே எரிமலையில் கடந்த சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட சீற்றத்தால் உயிரிழந்த 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சீற்றத்தில் மேலும் 16 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
அந்த எரிமலையிலிருந்து தொடர்ந்து விஷத்தன்மை வாய்ந்த தீப்பிழம்பு வெளியேறி வருகிறது. இதனால் சீற்றம் உருவான பகுதியை மீட்புக் குழுவினர் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பெய்த கன மழை காரணமாக, மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, சீற்றம் ஏற்பட்ட பகுதியில் அரை மீட்டர் உயரத்துக்கு எரிமலைக் குழம்பு பரவி வருவதால், பல உடல்கள் மீட்க முடியாத அளவுக்கு புதைந்துவிடும் அபாயமிருப்பதாக மீட்புக் குழுவினர் அச்சம் தெரிவித்தனர்.