நாமக்கல் மாவட்டம், திருச்சங்கோடு அருகிலுள்ள பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் கணேஷ்.இவர் பேஸ்புக்கில் மிக ஆர்வமாக செயல்பட்டு நண்பர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார், இப்படி பேஸ்புக்கில் அறிமுகமான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராஜா என்கிற இளையராஜா என்பவரிடம் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், இளையராஜாவும் அவரது நண்பர்கள் ஐந்து பெரும் சேர்ந்து தங்களுடைய பிறந்த நாள் பார்ட்டிக்கு வருமாறு கணேசை சத்தியமங்கலத்துக்கு கூப்பிட்டுள்ளனர்.
இதனை நம்பிய கணேஷ் புதன்கிழமை சத்தியமங்கலம் சென்றுள்ளார். அங்குசென்ற கணேஷை, இளையராஜா, கார்த்தி, சவுந்தர், மாரிமுத்து, ஹரிஹரன் ஆகிய ஐந்து பேரும் சந்தித்துள்ளனர். இளையராஜாவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் கணேஷ்.
பின்னர் நண்பர்கள் 6 பேரும் மாரனூர், கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே உள்ள ஒரு இடத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் பேஸ்புக் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து கணேசை மிரட்டி, அவரிடமிருந்து பணம் ரூபாய் 1000, அரை பவுன்மோதிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டி அங்கிருந்து கை செலவுக்கு நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கணேஷ் சத்தியமங்கலம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவத்தில் தொடர்புடையை 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.