கிளாஸ்கோ : 20வது காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில்
பங்கு கொள்ள வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 215
நபர்களைக் கொண்ட இந்திய குழுவும் சென்றிருந்தது. இவர்கள் கிளாஸ்கோ
நகரிலுள்ள விளையாட்டு கிராமத்தில் தங்கினர். இவர்களுடன் இந்திய ஒலிம்பிக்
சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா மற்றும் அணியில் இணைக்கப்படாத
அதிகாரியான மல்யுத்த நடுவரான வீரேந்தர் மாலிக்கும் சென்றிருந்தனர். இவர்கள்
விளையாட்டு கிராமத்திற்கு வெளியே விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாக
கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்கள் இருவரும்
ஸ்காட்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவல்
வெளியாகியுள்ளது. இத்தகவலை ஸ்காட்லாந்து காவல்துறையின் செய்தித்
தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.
இவர்களில் வீரேந்தர் மாலிக் பாலியல்
குற்றத்திற்காகவும், ராஜீவ் மேத்தா குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும்
கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட இருக்கிறார்கள்.