சென்னை: மிகப் பெரிய தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஜாமீன் அளித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்று அவர் விடுதலையானார்.
இந்த நிலையில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்குப் போட்டுள்ளார். அதில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கும் முன் தமிழக அரசின் கருத்து கேட்கப்படவில்லை. ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோர் பல மாதம் சிறையில் இருந்த பிறகே ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவுக்கோ எந்த நிபந்தனையும் இல்லாமல் ஜாமீன் தரப்பட்டுள்ளது. எனவே இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு பரிசீலனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.