காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண முற்படாமல், போராட்டம் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்ற தலைவர்கள் அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டினார்.பாஜக சார்பில் இந்தியா முழுவதும் உறுப்பினர் சேர்க்கைக்காகக் கட்டணமில்லா தொலைபேசி எண் "18002662020' மூலம் "மிஸ்டு கால்' செய்யும் திட்டம் தொடர்பான கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழிசை சௌந்தரராஜன் உள்பட அனைத்து மாநில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் "மிஸ்டு கால்' செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக செயல்படுத்துவது குறித்து மாநிலத் தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தை ஓட்டு வங்கிக்காகவோ, சுய லாபத்துக்காகவோ பாஜக பயன்படுத்தாது. பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் தொடர்ச்சியான அக்கறை, தலையீட்டால்தான் ஐந்து பேரையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. இலங்கை சிறையில் வேறு வழக்குகளின் கீழ் அடைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணும் வகையில் பாஜக செயல்படும்' என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.இதையடுத்து, பாஜக கூட்டணியில் உள்ள முக்கியத் தலைவர்களில் ஒருவரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் காவிரி நதி நீர் விவகாரத்துக்காக போராடி வரும் நிலையில், தமிழக பாஜக மட்டும் தொடர்ந்து மெüனம் காத்து வருவது குறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு, "காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. கர்நாடக அரசே தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக விவசாயிகளின் நிலையை எடுத்துரைத்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதிக்கு தமிழக பாஜக சார்பில் கடிதம் எழுதியுள்ளோம். இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண முற்படாமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்கள் போராட்டம் நடத்தி அரசியலாக்க முயற்சிக்கின்றனர். கூட்டணிக் கட்சியில் இருப்பதாக அவர்கள் கருதுவார்களேயானால், நேரடியாகச் சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சரை அவர்கள் அணுகி கோரிக்கை வைக்கலாம்' என்றார் தமிழிசை செüந்தரராஜன்.