BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 10 November 2024

தேர்தலுக்காக குடும்பங்களை பிரித்த 'பவார்'கள் ; உறவுகளை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தலில் இரண்டு கூட்டணியிலும் 6 கட்சிகள் போட்டியிடுகின்றன. கட்சிகள் பிளவு பட்டது போல் அரசியல் மற்றும் தேர்தலுக்காக குடும்பங்களிலும் அதிக அளவில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. அதோடு கூட்டணியிலும் கடைசி வரை தொகுதி பங்கீடு முடியாமல் கூட்டணி கட்சிகளே ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை இருந்து வருகிறது. மகாராஷ்டிரா முழுவதும் 29 தொகுதியில் கூட்டணி கட்சிகள் தங்களது அணியில் உள்ள கட்சிகளை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. ஆளும் மஹாயுதி கூட்டணியில் அது போன்று 6 பேர் நட்பு ரீதியில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். இதே போன்று எதிர்க்கட்சி கூட்டணியில் 21 தொகுதியில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். இது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிற்து.

எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்று இருந்த உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு கூட்டணியில் கடைசி வரை தொகுதி ஒதுக்குவதில் தாமதம் செய்து வந்தனர். இறுதியாக ஒரு சில தொகுதிகளை மட்டும் ஒதுக்கினர். இதனால் இக்கட்சிகள் தங்களது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) கட்சிகளை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றனர். இதே போன்று அரசியல் தலைவர்களின் குடும்பத்திலும் தேர்தலுக்காக பிளவு ஏற்பட்டு இருக்கிறது. சகோதரர்கள், மனைவி, மகள் என ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

விதர்பாவில் உள்ள அஹ்ரி தொகுதியில் தந்தையும், மகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். அமைச்சர் தர்மராவ் பாபாவும், அவரது மகள் பாக்யஸ்ரீயும் அஹ்ரி தொகுதியில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். இதில் தர்மராவ் பாபா துணை முதல்வர் அஜித் பவார் கட்சியில் போட்டியிடுகிறார். அவரது மகள் சரத் பவார் கட்சியில் போட்டியிடுகிறார். அதோடு தர்மராவ் பாபாவின் உறவினரான பா.ஜ.க முன்னாள் அமைச்சர் அம்பிரிஷ் ராவும் இதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் இத்தொகுதியில் போட்டி கடுமையாகி இருக்கிறது.

இதே போன்று நாண்டெட் தொகுதியில் பா.ஜ.க முன்னாள் எம்.பி. பிரதாப் ராவ் துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து லோஹா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரது மைத்துனர் ஷியாம்சுந்தர் ஷிண்டே போட்டியிடுகிறார். ஷியாம்சுந்தர் இப்போது இத்தொகுதியில் உழவர் உழைப்பாளர் கட்சி எம்.எம்.ஏ.வாக இருக்கிறார். ஏற்கனவே இருவரும் ஏ.பி.எம்.சி எனப்படும் வேளாண்மை விளைபொருள் விற்பனை மார்க்கெட் தேர்தலில் ஒருவரை எதிர்த்து ஒருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். இதே போன்று புல்தானாவில் உள்ள தொகுதியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பாக ராஜேந்திர சிங்கானே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரின் உறவுக்கார பெண் காயத்ரி சிங்கானே அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிடுகிறார்.

பாராமதி தொகுதியில் அஜித் பவாரை எதிர்த்து அவரது சொந்த சகோதரர் மகன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். இதனால் இத்தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பீட் தொகுதியில் சிவசேனா(ஷிண்டே)வின் ஜெய்தத்தா ஷிர்சாகர் தனது உறவினர் சந்தீப் ஷிர்சாகரை எதிர்த்து போட்டியிடுகிறார். சரத் பவார் கட்சியில் இருந்து சந்தீப் போட்டியிடுகிறார். இதே போன்று பல தொகுதியில் தங்களது சொந்த உறவுகளை எதிர்த்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிகமானோர் சரத் பவார் மற்றும் அஜித் பவார் கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

சாவ்னார் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சித் தேஷ்முக் மகன் அமோல் தேஷ்முக் தனது சகோதரர் ஆசிஷ் தேஷ்முக்கை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறார். புஷாட் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) சார்பாக போட்டியிடும் இந்திரனில் மனோகரை எதிர்த்து அவரது சகோதரர் யெயாதி மனோகர் போட்டியிடுகிறார். கன்னாட் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.ஹர்ஷ்வர்தன் ஜாதவ் தனது மனைவி சஞ்ஜனா ஜாதவை எதிர்த்து போட்டியிடுகிறார்



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies