அமெரிக்க அதிபர்களாக இருந்த புஷ் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புஷ் 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஜார்ஜ் புஷ் 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். அவரது மகன், ஜார்ஜ் டபிள்யு புஷ் 2001-ஆம் ஆண்டு முதல் 2009 வரை அதிபராக இருந்தார். இந்த இரு புஷ்களையடுத்து, அவர்களது குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. அவர் பெயர் ஜெப் புஷ். இவர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய புதல்வர். ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் இளைய சகோதரராவார். ஜெப் புஷ், ஃபுளோரிடா மாகாணத்தின் ஆளுநராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர். இவரது மகன் ஜார்ஜ் பி. புஷ், ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில், அதிபர் தேர்தல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, குடியரசுக் கட்சி சார்பில் ஜெப் புஷ் போட்டியிட குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர் என அவரது மகன் கூறினார். அதிபர் தேர்தலில் ஜெப் புஷ் போட்டியிடுவதை அவரது தந்தையும் சகோதரரும் எப்போதுமே ஆதரித்து வந்ததாக ஜார்ஜ் பி. புஷ் கூறினார். ஆனால் ஜெப் புஷ்ஷின் தாயார் இதற்கு முழு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நவம்பர் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு, குடியரசுக் கட்சி சார்பில் ஜெப் புஷ் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. ஜெப் புஷ்ஷின் தந்தை, ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்தில் இராக் எதிராக அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கியன. ஜெப் சகோதரர் ஜார்ஜ் டபிள்யு புஷ் பதவி வகித்த காலத்தில், இராக் அதிபர் சதாம் உசைன் பதவி நீக்கம், அவரது மரண தண்டனை நிறைவேற்றம் நடைபெற்றன. 2001-ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் தேடப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.